எண்ணெய் வகைகள்
கற்பூரத் தைலம்
தேவையான பொருட்கள்:
கற்பூரம்.
தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணெய்.
செய்முறை:
ஓர் அவுன்ஸ் கற்பூர பொடியை நான்கு அவுன்ஸ் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து நன்கு கலக்கினால் கற்பூரத் தைலம் ஆகிவிடும்.
உபயோகிக்கும் முறை:
இந்த தைலத்தை பத்து பதினைந்து நொடிகளில் நன்கு அழுத்தித் தேய்த்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
வாதம், முளிகளில் உண்டாகும் வலி ஆகியவைகள் குறையும்.
கரன் எண்ணெய்
தேவையான பொருட்கள்:
ஆளி விதை எண்ணெய்.
சுண்ணாம்பு நீர்.
செய்முறை:
ஆளி விதை எண்ணெய், சுண்ணாம்பு நீரும் சேர்த்துக் குலுக்கினால் கரன் எண்ணெய் ஆகிவிடும்.
தீரும் நோய்கள்:
நெருப்புப்பட்ட புண்களுக்கு இந்த எண்ணெயை போட்டு வந்தால் தீப்பட்டப் புண்கள் குறையும்.
ஆமணக்கு
மருத்துவக் குணங்கள்:
ஆமணக்கு மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.
கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரிதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். சாம்பல் நிறமான பூச்சுடைய, பத்து அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.
எளிதில் உடையக்கூடிய தண்டை உடையது. முட்களுடன் கூடிய காய்கள் காய்க்கும். இவை காய்ந்தால் வெடிக்கும் தன்மையுடையது. பழங்கள் கூர்மையான ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு.
கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். ‘சித்திரகம்’, ‘ஏரண்டம்’ என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும்.
ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, ‘ஆமணக்கு முத்து’, ‘ஆமணக்கங் கொட்டை’ என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகிறது. விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.
இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன.
இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்பு சுவையும், வெப்பத்தன்தையும் கொண்டவை. இலையானது வீக்கம், கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும் தாய்ப்பால் பெருக்கும். வேர், வாத நோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.
எண்ணெய் மலமிளக்கும், வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளை தாய் போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, ‘ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்’ என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும்போது, பொங்கிவரும் பதநீர் கீழே வடியாமல் தடுக்க, பதநீர் பொங்கும்போது, ஆமணக்கு முத்துகளைப் போடுவர். இதனால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வெளியே பதநீர் வராது.
திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.
கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும். மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர்.
ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையிலேயே இவ்வாறு வளர்க்கின்றனர். யோனா என்ற தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்குப் பயன்படும்படி ஆமணக்குச் செடியை ஆண்டவர் வழங்கியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.
ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது, மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது, அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர்.
இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ‘கிரிஸ்’ ஆகும். இவ்வழவழப்புத் தன்மை யின் காரணமாகத்தான் பால் கறக்கும்போது, மாட்டின் மடுக்காம்புகளில் விளக்கெண்ணெயைத் தடவுவது வழக்கம். இதனால் மாட்டின் மடுவிலுள்ள காம்புகளில் கீறலோ வடுவோ விழுவது தடுக்கப்படும்.
விளக்கெண்ணெயின் வழவழப்புத் தன்மையின் அடிப்படையில் எதிலும் உறுதியான முடிவெடுக்காமல் இருப்போரைக் குறிக்க ‘சரியான விளக்கெண்ணெய்’ என்னும் சொல்லாட்சி இன்றும் வழக்கிலுள்ளது.