தாழம்பூ மணப்பாகு
தேவையான பொருள்கள்:
தாழம் பூ
நீர்
சர்க்கரை
செய்முறை:
தாழம்பூவை சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.
நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இதேபோன்று தாழம்பூ வேரினை பயன்படுத்தியும் செய்யலாம்.
மருத்துவக்குணங்கள்:
இவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை தடுக்கலாம்.
தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.
தாழம்பு வேரினை கொண்டு தயாரித்த மணப்பாகினை உட்கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
பூவரசம் பூ
இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்கள் எண்ணற்ற மருத்துவக்குணங்களைப் பெற்றுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பூச்சிக்கடி மற்றும் வண்டுக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு இந்த பூக்களைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவக்குணங்கள்
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:
தோல் நோயினால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூவை நன்கு அரைத்து அவற்றின் மீது தடவினால் தோல்நோய் குணமாகும்.
விஷக்கடி குணமாக:
பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற விஷப்பூச்சிகள் கடிப்பதால் உண்டாகும் தோல்சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டுமெனில் பூவரசம் பூவை 25 கிராம அளவு எடுத்து நன்கு அரைத்து அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் நீர் பாதியாக வற்றியவுடன் அதனை வடிகட்டி தொடர்ந்து மூன்று நாளைக்கு காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் தோல்சம்பந்தமான நோய்களான ஊறல், தடிப்பு, அரிப்பு, வீக்கம், மயக்கம் மற்றும் சோம்பல் ஆகியவை குணமாகும்.
குறிப்பு:
இவ்வகையான கஷாயத்தை உட்கொள்ளும்போது எண்ணெய், கடுகு போன்றவற்றை போட்டு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மேலும் மீன் கருவாடு போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது.
மூட்டுவீக்கம் குணமாக:
மூட்டு வீக்கத்தால் துன்பப்படும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பூவரசம் பூ, காய், பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வீக்கம் குணமாகும்.
இத்தகைய மருத்துவக்குணங்களைப் பெற்ற இந்த “பூவரசம் பூவை” நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக உண்போம்; உலகில் நோயின்றி வாழ்வோம்.
துத்திப்பூ
துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.
மருத்துவக்குணங்கள்
ஆண்மை பெருகும்:
துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும்.
மேலும் ஆண்மையை பெருக்கும்.
ஆஸ்துமாநோய் குணமாக:
துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்.
மூலநோய் குணமாக:
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.
ரத்தவாந்தி குணமாக:
அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.
ரோஜா
மருத்துவக் குணங்கள்:
பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத் தந்து மகிழ்விக்கும்.
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.
No comments:
Post a Comment